தேனி அருகே 2 கோயில்களில் உண்டியல் உடைப்பு: போலீசார் விசாரணை
தேனி, ஆக. 9: தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டி பகுதிகளில் உள்ள இரண்டு கோயில்களில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். தேனி அருகே அரண்மனை புதூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 6ம் தேதி இரவு பூட்டிவிட்டு மறுநாள் காலை கோயிலை திறந்த போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சமுதாயத் தலைவரான பாண்டியன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல தேனி அருகே கோடாங்கிபட்டியில் இருந்து போடி செல்லும் வழியில் தீர்த்த தொட்டியில், சித்திர புத்திர நயினார் கோயில் உள்ளது.
இக்கோயிலை கடந்த 6ம் தேதி இரவு 6 மணி அளவில் பூட்டிவிட்டு கோயில் பூசாரி முருகன் வெளியே சென்று விட்டு இரவு கிளம்பி வந்த போது கோயிலில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து கோயில் பூசாரியான முருகன் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.