கம்பத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கம்பம், டிச.3: கம்பத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் எல்.எப்.மெயின்ரோடு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(30). இவர் தனது வீட்டின் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக தண்ணீர் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டாரில் இருந்து மின்சாரம் கார்த்திக் ராஜா மீது பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்டு அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.