கழிவுநீர் கால்வாயில் இருந்து முதியவரின் உடல் மீட்பு
ஆண்டிபட்டி, டிச.2: ஆண்டிபட்டி அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த முதியவர் சடலம் மீட்கப்பட்டது. ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள சக்கம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இடதுபுறமாக செல்லும் கழிவுநீர் கால்வாய் தண்ணீருக்குள் தலை மூழ்கிய நிலையில் உயிரிழந்த முதியவரின் உடலை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் குழுவினர் அந்த உடலை மீட்டு விசாரித்ததில் இறந்தது சக்கம்பட்டி, திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த முதியவர் மணி என்பது தெரியவந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அருகே உள்ள சக்கம்பட்டி மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இறந்த முதியவரின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண்டிபட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.