மனுவிற்கு ஒரே நாளில் தீர்வு முதியோர் உதவித்தொகை ஆணையை வீடுதேடி சென்று வழங்கிய கலெக்டர்
விருதுநகர், ஜூலை 24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்த மூதாட்டியின் மனுவிற்கு, ஒரே நாளில் பரிசீலித்து முதியோர் உதவித்தொகை ஆணையை மூதாட்டி இல்லம் தேடி சென்று கலெக்டர் வழங்கினார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி சந்திரா(75).
இவர் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்தார். மனுவை பரிசீலித்து, அவரின் வீட்டிற்கு கலெக்டர் சுகபுத்ரா நேரில் சென்று சந்திராவிடம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
முன்னதாக, குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவு தயாரிப்பிற்கான மூலப் பொருட்களின் தரம் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெறுவதை ஆய்வு செய்தார். நிகழ்வில் சிவகாசி வட்டாட்சியர் லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.