கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதனை
பேராவூரணி, அக்.13: பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டை விட 2025-26 ஆம் கல்வியாண்டில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளமைக்காக பள்ளிக்கல்வித்துறை பாராட்டி சான்றிதழ் வழ ங்கி கெளரவித்துள்ளது. கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பேராவூரணி பகுதியில் உள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, தூரம் அதிகம் என்றாலும் கொன்றைக்காடு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர்.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதால், சென்னை நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொன்றைக்காடு தலைமை ஆசிரியர் (பொ) குமரேசனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 180 பள்ளிகளுக்கும் , தஞ்சை மாவட்டத்தில் 4 பள்ளிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதில் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.