தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம் அரவைக்கு 1250டன் அரிசி அனுப்பி வைப்பு
தஞ்சாவூர், அக். 8: தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1250 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரயிலில் 1250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக 21 வேகன்களில் நாமக்கல்லுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயில் நேற்று 42 வேகன்களில் சேலத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.