தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு
தஞ்சாவூர், அக்.25: தொடர்மழை எதிரொலியாக தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, பொன்னாவரை, அம்மன்பேட்டை, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம், குருங்குளம், கண்டிதம்பட்டு, கொல்லங்கரை வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வாரம் 22 டன் வரத்து வந்த நிலையில் தற்போது 16 டன்னாக குறைந்து உள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.56, தக்காளி ரூ.50க்கும், அவரைக்காய் ரூ.106க்கும், பாகற்காய் ரூ.50க்கும், ரூ.32க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.48க்கும், பீட்ரூட் ரூ.50க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், சவ்சவ் ரூ.24க்கும், முருங்கைக்காய் ரூ.100க்கும், காலிபிளவர் ரூ.66க்கும், முட்டைக்கோஸ் ரூ.40க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் காய்கறிகளை குறைந்த அளவில் வாங்கி சென்றனர்.