குன்னூர் அருகே அடார் எஸ்டேட்டிற்கு மினி பேருந்து செல்லாததால் மாணவர்கள் அவதி
குன்னூர், ஜூலை 15: குன்னூர் அருகேயுள்ள அடார் பகுதிக்கு முறையாக மினி பேருந்துகள் செல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. சில கிராமங்களில் குறுகலான சாலைகள் இருப்பதாலும், குறுகிய வளைவுகள் இருப்பதாலும் அரசு பேருந்துகள் செல்ல முடியாத சில இடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடார் எஸ்டேட் பகுதிக்கு மினி பேருந்துகள் சென்று வந்தது.
ஆனால், அந்த வழித்தடத்தில் மினி பேருந்தை இயக்குவதற்கு உரிமம் பெற்ற பேருந்துகள் சில நாட்களாக அடார் வரை இயக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து, வண்டிச்சோலை பகுதிக்கு சென்று பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது பணிகளை முடித்து மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது 2 கிலோ மீட்டர் தூரம் வரை வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் முறையான மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.