விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி விண்வெளி சங்கம் சார்பில் 2 நாள் விண்வெளி கண்காட்சி கல்லூரி செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது. விண்வெளி கண்காட்சியை பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் முன்னாள் குழு இயக்குநர் விஞ்ஞானி இங்கர்சால் செல்லத்துரை திறந்து வைத்து பேசுகையில், கஹான்யான் விண்கலத்தின் கட்டுப்பாட்டு தரவுகளை கண்காணிப்பதற்கும், சந்திராயன் 3ல் ப்ரக்யான் ரோவரில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சந்திராயன் 4ல் அனைத்து தரவுகளிலும் செயற்கை நுண்ணறிவின் பங்கு மிக அதிக அளவில் காணப்படும். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இல்லாமல் தற்போது கண்டுபிடிப்புகள் மிக வேகமாக வளர்ந்து வருவதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மிக முக்கியமாக அமைக்கிறது. இன்று உலகின் சக்திவாய்ந்த 6 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருப்பதற்கு இந்திய விண்வெளி ஆய்வுகளும் முக்கிய காரணமாக அமைகிறது, என்றார்.
சவாலான விண்வெளி ஆராய்ச்சியை தேர்வு செய்ய மாணவர்களை ஊக்குவிப்பதற்காக விண்வெளி கண்காட்சி விண்வெளி சங்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஆர்யபட்டா, சந்திராயன், ஓசான்சாட் 2, ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி, ஜிசாட் 30, ஸ்புட்னிக் 1 ஆகியவற்றின் மாதிரிகள் மாணவர்களால் தயார் செய்யப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்வில், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலகர் சிவக்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.