மானாமதுரை அருகே கார் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
மானாமதுரை, செப்.2: மானாமதுரை அருகே வாடகை கார் ஒட்டி வந்த டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை அருகே பி.குளம் கிராமத்தை சேர்ந்த நிறைகுளத்தான் மகன் சிவா(24). இவரது நண்பர் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஆனந்த்(21). சிவா தனது ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு காரைக்குடியில் உள்ள ஆனந்தை அழைத்துள்ளார். ஆனந்த் தனது நண்பர்களான ஐந்து பேருடன் திருவிழாவிற்கு சென்றனர். விழா முடிந்து ஊருக்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்றை சிவா சிவகங்கையில் இருந்து வரவழைத்துள்ளார்.
காரை சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் சம்பத்குமார் (24) ஒட்டி வந்துள்ளார். சிவா, ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் காரில் ஏறியுள்ளனர். கார் புளியங்குளம் விலக்கு அருகே செல்லும் போது 7 பேரும் திடீரென கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டிரைவர் சம்பத்குமார் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ராஜா மகன் இசக்கிமுத்து(18), முத்துப்பட்டினம் மூர்த்தி மகன் பாலமுருகன்(21), காரைக்குடி முத்துராமலிங்க நகர் செல்லையா மகன் மாயராஜா(24), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் மதன்(20) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய சிவா, ஆனந்த் ஆகியோர் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.