தென்மாபட்டு பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
திருப்புத்தூர், செப்.2: திருப்புத்தூர் தென்மாபட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்புத்தூர் பகுதியில் உள்ள தஞ்சாவூர் - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் என மொத்தம் 22 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பந்தய எல்லைகளாக பெரிய மாட்டிற்கு 7 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 5 மைல் தூரமும் பந்தைய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்டன. போட்டியினை திமுக ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், திருப்புத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இப்போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து ஆர்வமுடன் உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர்.