பட்டப்படிப்பு படிப்போர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, செப்.3: பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் இன மாணவ,மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரிலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர்கள் இக்கல்வி உதவித்தொகை பெற இயலாது. புதுப்பித்தல் 30.9.2025ம் தேதிக்குள் மற்றும் புதியது 31.10.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.