முத்து வடுகநாதர் கோயிலில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
சிங்கம்புணரி, ஆக.4: சிங்கம்புணரியில் புகழ்பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் அன்னதான விழா சிறப்பாக நடைபெறும். வணிகர் நல சங்கம் சார்பாக அன்னதான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை சித்தருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் வாசனை திரவியங்கள் பழச் சாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
வண்ணமலர் அலங்காரத்தில் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து கோயிலில் முன்பு போடப்பட்டிருந்த மெகா பந்தலில் அன்னதானத்திற்கு மலை போல் குவிக்கப்பட்ட சாதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய அன்னதான விழா மாலை வரை நடைபெற்றது. சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் வேட்டையன் பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் நொண்டி கருப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு பந்தல் அமைத்து அன்னதானம் விழா நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.