சிவகங்கையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை, ஜூலை 24: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை மறு நாள் நடத்தப்பட உள்ளது. சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளனர்.
8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணிநியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.