கார் மோதி விவசாயி பலி
கெங்கவல்லி, அக்.12:கெங்கவல்லி பேரூராட்சி குரும்பர் தெருவை சேர்ந்தவர் ராஜா(51). இவர் சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எல்சி, காட்டுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, எல்சியை கல்லூரியிலிருந்து அழைத்து வருவதற்காக தனது காரில் ராஜா சென்றார். வளையமாதேவி வளைவுப் பகுதியில், கார் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற காட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த செந்தில் (46) என்பவர் மீது மோதியதில் அவர் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, செந்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விவசாயியான செந்திலுக்கு சொப்னா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியரின் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.