தங்க சாலை தெருவில் ரூ.4 கோடி கோயில் நிலம் மீட்பு
சென்னை, ஜூலை 11: தங்க சாலை தெருவில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை, உதவி ஆணையர் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை தங்க சாலை தெருவில் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 805 சதுர அடி பரப்பளவு நிலத்தை, சத்தியநாதன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து டிபன் கடை நடத்தி வந்தார். இந்த கடையை காலி செய்யும்படி, கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தியும், சத்தியநாதன் இடத்தை காலி செய்யாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்தார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்க உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் தனி வட்டாட்சியர், காவல் துறையினர் நேற்று இந்த டிபன் கடைக்கு சீல் வைத்து, நிலத்தை மீட்டனர். மீன்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.