மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு மாணவி பலி உறவினர்கள் திடீர் மறியல்
செங்கம், ஜூலை 14: செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் அடுத்த புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் யுவஸ்ரீ(11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது தந்தைக்கு உதவியாக வீட்டின் அருகே பொது குடிநீர் டேங்கில் தண்ணீர் எடுக்க சென்றார்.
பின்னர், யுவஸ்ரீ அருகில் உள்ள மின்மோட்டார் பாக்ஸை திறந்து சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிசிச்சைக்காக செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி யுவஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த புதுப்பாளையம் போலீசார், மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்ய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் திடீரென திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.