கடலாடி அருகே சோகம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
சாயல்குடி, செப். 19: கடலாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலாடி அருகே ஒருவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு கட்டுமானப் பணிக்காக கம்பி அறுத்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக மின்சாரத்தை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த மாயக்கண்ணனின் மகன் ஆதிரன்(2), தெரியாமல் மின்வயரில் மிதித்தாக கூறப்படுகிறது. அப்போது மின்வயரில் இருந்த பழுது காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் துடித்துடித்து மயங்கி விழுந்தான். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக ஆதிரனை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.