வன உயிரின பாதுகாப்பு தினத்தில் கடற்கரையில் மாணவிகள் தூய்மை பணி
ராமேஸ்வரம்,அக்.9: தேசிய வன உயிரின பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, குருசடை தீவை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். வன உயிரின பாதுகாப்பு வாரம், ஆண்டுதோறும் அக்.2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்திய வனவிலங்கு வாரியத்தால் தொடங்கப்பட்டது. வன உயிரின பாதுகாப்பு வாரத்தின் கடைசி நாளான நேற்று தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மங்களேஸ்வரி தலைமையில் மாணவிகள் குருசடை தீவை பார்வையிட்டனர். மேலும் கடற்கரையோரத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம், உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து வன அலுவலர்கள் சாமிநாதன் மற்றும் மணிகண்டன் மாணவிகளுக்கு விளக்கி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் ஜான்போஸ் மற்றும் பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.