பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து பரவலாக பெய்யும் மழை: நெல் நடவுப்பணிகள் தீவிரம்
பொன்னமராவதி, செப்.27:பொன்னமராவதி பகுதியில் 250 ஹெக்டேர் சம்பா பருவ நெல்நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த 10 நாட்ளாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் இப்பகுதியில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, தூரலும் சாரலுமாக மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த மழையினை பயன்படுத்தி மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, கேசராபட்டி, புதுப்பட்டி, மணப்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மழை பெய்து வருவதால் போர்வெல் மோட்டார் மூலம் நெல் நடவு செய்யும் ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, செம்பூதி, காட்டுப்பட்டி,
திருக்களம்பூர், கருப்புக்குடிப்பட்டி, வார்பட்டு, ஆர்.பாலகுறிச்சி, மேலத்தானியம், காரையூர், ஒலியமங்களம், நல்லூர், சேரனூர், அரசமலை, தேனூர், இடையாத்தூர், சடையம்பட்டி, சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, கங்காணிப்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் இப்போது தான் நாற்றங்கால் அமைக்கப்பட்டு நெல் நாற்று போடப்பட்டுள்ளது. தற்போதுவரை, பொன்னமராவதி பகுதியில் 250 ஹெக்டேர் சம்பா பருவ நெல்நடவு செய்யப்பட்டுள்ளன.