புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
புதுக்கோட்டை, ஆக. 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் பங்கேற்று மக்கள் பயனடையலாம் என கலெக்டர் அருணா தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வரும் அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும்.
இம்முகாம்களில், பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வுகாணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இம்முகாம், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (8ம் தேதி ) அன்று புதுக்கோட்டை மாநகராட்சி, 13 மற்றும் 15 வார்டுபகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வடக்கு 3-ஆம் வீதியில் உள்ள கார்த்திக் மஹாலிலும்;
அறந்தாங்கி நகராட்சி, 14 மற்றும் 15 வார்டு பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்களுக்கு அறந்தாங்கி வசந்தம் திருமணமஹாலிலும்,அரிமளம் - 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கைக்குலான்வயல் சமுதாயக் கூடத்திலும்,மணமேல்குடி - 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கரகத்தி கோட்டை சேவை மையக்கட்டிடத்திலும்,
அன்னவாசல் - 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு இருந்திராப்பட்டி சமுதாயக் கூடத்திலும், ஆவுடையார்கோவில் - 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மீமிசல் புயல் பாதுகாப்பு மையக்கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில், பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.இத்தகவலை, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.