கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க அனுமதிக்ககூடாது
கந்தர்வகோட்டை, அக். 26: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர் கிராமத்தில் அமையவிருக்கும் மருத்துவ உயிரி கழிவு ஆலை அமைந்தால் இந்தப் பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதிப்பு என பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால், மக்களை அச்சுறுத்தும் வகையிலான நோய்கள் பரவும். இந்த ஆலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசானத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இடதுசாரி கட்சியினர் இந்த ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என கூறி கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், சிபிஐ ஒன்றிய செயலாளர் அரசப்பன், சிபிஐ (எம் எல்) ஜோதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் சங்கர், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் செங்கோடன், விசிக மாவட்ட செயலாளர் இளமதி அசோகன், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் வளத்தான் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவ உயிரி கழிவு ஆலையால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படவிருக்கும் விவசாய பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும் மிகப்பெரும் கொடிய நோய்கள் மற்றும் பறவை பூச்சி இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பேசினார். இதில், ஆலை அமைவதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உறுதி கூறி சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் பிசானத்தூர் கலியபெருமாள், ராமையன் , வைரமூர்த்தி, நாகராஜன், விடுதலைவளவன்மற்றும் இடதுசாரி கட்சியினர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.