ஜங்கால்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
ஆண்டிபட்டி, ஜூலை 9: கொடுவிலார்பட்டி அருகே, ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி வட்டம் கொடுவிலார்பட்டி அருகே, ஜங்கால்பட்டி கிராமத்தில் இன்று (ஜூலை 9) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை முகாமில் நேரில் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.