மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்; ரூ.5.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
கரூர்: கரூர் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை வந்து, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.இதனடிப்படையில், நேற்று (14ம் தேதி) கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 595 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இக்குறைதீர்நாள் கூட்டத்தில், தாட்கோ துறையின் மூலம் மகளிர் நில உரிமை திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுககு தலா ரூ. 5லட்சம் மானியத்தில் நில உடைமை பத்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக காதொலி கருவி, டெய்ஸி பிளேயர், கருப்புக் கண்ணாடிகள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு குச்சி மற்றும் பார்வையற்றோர்களுக்கான கைக்கடிகாரம் என 9 பயனாளிகளுக்கு ரூ.43,548 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ. 5,43,548 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
குறைதீர் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, தாட்கோ மேலாளர் முருகவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.