ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்
கோவை, பிப்.14: ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ள புதிய வக்புபோர்டு சட்ட திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு போர்டு சட்ட திருத்த மசோதா எரிப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நேற்று மாலை மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். பின்னர், அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், வக்புபோர்டு சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் திடீரென்று வக்பு போர்டு சட்ட திருத்த மசோதாவை தீ வைத்து எரித்தும், கிழித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.