குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
புழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் தஞ்சாவூர் அம்மாபேட்டை வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (27) என்பது தெரிய வந்தது.
இவர் அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு போதையில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இவரை கொலை செய்த 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.