தா.பழூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
தா.பழூர், ஜூலை 23: தா.பழூரில் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் நந்தி பெருமான் தரிசனம் நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, எலுமிச்சை, பால், தயிர், தேன், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் தா.பழூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி செளந்திரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோயில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மாள் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோயில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புரந்தான் சோழிஸ்வரர் கோயில், கோவிந்தபுத்தூர் மங்களாம்பிகை சமேத கங்கா ஜடேஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் நந்தி பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.