கிரஷர், குவாரிகள் சங்கம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
கோவை, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம், மாவட்ட கனிம வளம், புவியியல் துறை சார்பில் செட்டிபாளையம் ஓராட்டு குப்பை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, கோவை மாவட்ட கனிம வளம், புவியியல் துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், கிரசர் மற்றும் குவாரிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி, மாவட்டத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மா, வேம்பு, அரசு, வாகை, புங்கன், அகில் என 30க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட அளவில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டன. குவாரி மற்றும் கிரஷர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் உலக சூழல் தினத்தையொட்டி பல்வேறு பகுதியில் பல ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. ஓராட்டு குப்பை பகுதியில் முட்புதர் காடுகள் அழிக்கப்பட்டு மரக்கன்றுகள் நட்டு அந்தப் பகுதியில் பசுமை தோட்டம் உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.