வடவாளத்தில் வழிபாட்டு உரிமை கோரிஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு அப்பகுதியிலுள்ள செல்லாயி அம்மன் மற்றும் கலியுக மெய்ய அய்யனார் கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், வடவாளம், இச்சடி அண்ணாநகர், கண்டங்காரப்பட்டி, சின்னையாசத்திரம், செட்டியாப்பட்டி, காயாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வடவாளம் ஊராட்சிக்குளள்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 1200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள செல்லாயி அம்மன் மற்றும் கலியுக மெய்யர் அய்யனார் கோவிலுக்குள் சென்று வழிபட எங்களுக்கு உரிமையில்லை. திருவிழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைக்க விடுவதில்லை. பால்குடம், காவடி, பூ எடுக்க அனுமதிப்பதில்லை. சமநீதியை வழங்க மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.