பாடாலூரில் மது விற்ற வாலிபர் கைது
பாடாலூர், அக் 24: பாடாலூரில் மது விற்ற வாலிபர் கைது செய்த போலீசார் 60 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா, மதுபானங்கள் விற்று வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி ஆதர்ஷ் பசேராவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் நடவடிக்கை எடுக்கும்படி தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீஸார் பாடாலூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார், அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த, ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பார்த்திபன் (32), என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி, சட்டவிரோதமாக விற்று வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பார்த்திபனிடம் இருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவரை, பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.