வாலிகண்டபுரத்தில் குட்கா விற்ற பெட்டி கடைக்காரர் கைது
பெரம்பலூர்,அக்.10: வாலிகண்டபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 1.800 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெட்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல் துறை நடத்திய சோதனையில், வாலிகண்டபுரம் கிராமத்தில், கீழப்புலியூர் செல்லும் சாலையில் வசிக்கும் செல்வராஜ் மனைவி ராணி (56) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மங்கள மேடு போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் ராணியைக் கைது செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் - 1.820 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மங்களமேடு காவல் நிலைய எஸ்எஸ்ஐ மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையிய மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிமுன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.