பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு
பாடாலூர், டிச.8: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாட்கோ சார்பில்,பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தினை நேற்றுமுன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆய்வகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வகமானது 1628.69 ச.அடியில் 2 அறைகளுடன் கூடியது. பின்னர் எம்எல்ஏ பிரபாகரன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி பயிலும் மாணவர்களுக்கான புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி போன்ற பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கி, மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவித்து வருகிறார். மேலும் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறார்.
மேலும் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக பள்ளிகளுக்கு தேவையான, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை, ஆய்வகம், சத்துணவுக்கூடம், ஆய்வக கட்டடம் கட்டுதல் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார் என்றார். இந்நிகழ்வில், அட்மா தலைவர் ஜெகதீசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.