பிரதோஷத்தை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்திக்கு அபிஷேகம்
பெரம்பலூர், ஆக. 7: பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (6ம் தேதி) மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்படி, அதிகார நந்தி மற்றும் ஈசன் மூலவர் மற்றும் உற்சவங்களுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன். சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திருஞானம், மோகன் உட்பட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர். முன்னதாக ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி கோயில் உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.