பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுமுகாம்
பெரம்பலூர், அக்.23: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனுமுகாமில் 11 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று 11மணிக்கு, எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் சிறப்பு மனுமுகாம் நடை பெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களைப் பெற்றார்.
இந்த சிறப்பு மனுமுகாமில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) கோபாலச் சந்திரன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்கள மேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த மனு முகாமில் கலந்துகொண்டனர். இந்த சிறப்புமனுமுகாம் மூலம் 11-மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
முகாமில் பேசிய மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு மனு விசாரணை முகாம் நடை பெறும். பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனு விசாரணை முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக பாலக்கரையிலிருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும், மீண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து புதுபஸ்டாண்டு செல்லவும் ஏதுவாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.