பள்ளி,கல்லூரி மாணவர்கள் போதைபொருள் எதிர்ப்பில் உறுதி வேண்டும்
பெரம்பலூர், ஆக.12: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு 60,022 மாணவ, மாணவிகள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், அலுவலர்கள் நிகழ்ச்சியினை நேரலையில் பார்வையிட்டு உறுதி மொழியினை ஏற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 60,022 மாணவ, மாணவிகள் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதன்மூலமாக மாணவ, மாணவியர் ஆகிய நீங்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த உறுதிமொழி பெயரளவில் இல்லாமல், உண்மையாகவே கல்லூரி மாணவர்கள் கடை பிடித்திட வேண்டும். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, மாவட்டக் கலெக்டர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் கையொப்பமிட்டு, போதைப் பொருளுக்கு எதிரான Say No to Drugs என்ற சுய புகைப்படம் (செல்ஃபி)எடுத்துக்கொள்ளும் பதாகையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், கலால் உதவி ஆணையர் (பொ) முத்துகிருஷ்ணன், முன்னால் அரசு வழக்கறிஞர் இராஜேந்திரன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), வள்ளியம்மை இரவிச்சந்திரன் (அரும்பாவூர்),உதவி மேலாளர் (சில்லறை வணிகம்) முத்து முருகன், பெரம்பலூர் தாசில் தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், தனலட்சுமி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.