பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு பயிற்சி
பெரம்பலூர், நவ.11: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தொகுதி II & IIA முதன்மைத் தேர்வுகளுக்கான 645 பணி காலியிட அறிவிக்கைகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நாளை முதல் இந்த அலுவலகத்தால் நடத்தப்பட உள்ளன. 2024-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற TNPSC GROUP II & IIA தேர்வில் பெரம்பலூர் மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று 8 மாணவர்கள் வெற்றிபெற்று தற்போது அரசுப் பணியில் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group II, IIA முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதன்மைத் தேர்வு எழுத பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இலவச இப்பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பாடத் திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல், போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான Virtual Learning Portal-ல் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவுசெய்து தரப்படும். போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி. என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.எனவே, போட்டித் தேர்வில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி, தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.