நடு வழியில் பழுதான அரசு பேருந்தால் பயணிகள் அவதி
கூடலூர், அக்.7: கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரூற்றுப்பாறை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆரூற்றுப்பாறை பகுதி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதாகிறது. நேற்று ஆரூற்றுபாறையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கூடலூர் நோக்கி வந்த பேருந்து சிறிது தூரம் வந்ததும் பழுதாகி இயக்க முடியாமல் வழியில் நின்றது. இதனை அடுத்து பேருந்தில் வந்த பயணிகள் தனியார் ஜீப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். மேலும் பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் இப்பகுதிகளில் சாலை உரிய பராமரிப்பின்றி காணப்படுவதாலும் அடிக்கடி பேருந்து பழுதடைந்து விடுவதாகவும், இதனால் சரியான நேரத்துக்கு பேருந்து இயக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.