கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு மாடுகள் உலா
கோத்தகிரி,செப்.26: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் காட்டு மாடுகளை போட்டோ எடுத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்து மற்றும் மனித விலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் வனத்துறையினர் சாலையில் உலா வரும் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதுடன்,மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை யாரேனும் தொந்தரவு செய்யும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.