ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைக்க மானியம்
ஊட்டி, செப். 19: ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது.
மேலும், இந்த ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும்.
இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், ஊட்டியில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.