யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரி 3ம் நாளாக பாடந்துறையில் உண்ணாவிரத போராட்டம்
கூடலூர், ஆக.9: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். எல்லைகளில் அகழி மின்வேலி அமைத்து யானைகள் மீண்டும் ஊருக்குள் வராத வண்ணம் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் நேற்றும் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராம மக்கள் ஒவ்வொரு நாளும் திரளாக வந்து உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கூடலூர் டிஎப்ஓ வெங்கடேஷ் பிரபு, உண்ணாவிரதம் இருந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது டிஎப்ஓ, போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மக்கள் உரிமைக்குரல் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.