காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை
தேவகோட்டை, ஜூன் 12: தேவகோட்டையில் தி.ஊரணி மேற்கு சொக்கலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் லட்சுமணன் (40). பெற்றோர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த லட்சுமணன், ஊரில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தை 23 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே தம்பதி இடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், விரக்தியடைந்த லட்சுமணன் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தேவகோட்டை டவுன் போலீசார், லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.