விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி
ராசிபுரம், டிச. 12: ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில், தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவிகள் 10 பேர், தங்களது கிராமப்புற மற்றும் விவசாய பணி அனுபவ பயிற்சியைத் தொடங்கினர். நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் தனலட்சுமி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியின் போது கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். குறிப்பாக ‘நீல ஒட்டும் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் டெல்டா பொறிகளை ஏக்கர் 1க்கு எண்கள், 5 என்ற விகிதத்தில் வயல்களில் வைப்பதன் மூலம், பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்’ என நேரில் அமைத்து காண்பித்தனர். மேலும் ‘வயல்களின் ஓரங்களில் வரப்பு பயிராக தட்டைப்பயறு, ஆமணக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை நடவு செய்வதால், பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யலாம்’ என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.