பவித்திரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவு
சேந்தமங்கலம், அக்.28: எருமப்பட்டி அடுத்த பவித்திரம், செவ்வந்திப்பட்டி வாரச்சந்தைகளில் நேற்று ஆடுகள், நாட்டுக்கோழிகள் விற்பனை குறைந்தது. ரூ.45 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டி பகுதிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரு ஆட்டு சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயமுத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருகின்றனர். மேலும், சுற்றுவட்டர பகுதியான பொட்டிரெட்டிபட்டி, நவலடிபட்டி, வரகூர், வடவத்தூர், கோணங்கிப்பட்டி, முத்துகாபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இறைச்சிக்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். நேற்று கூடிய வாரச்சந்தையில் வளர்ப்பு ஆடுகள், கிடாக்கள், நாட்டுக்கோழிகள் வரத்து குறைந்திருந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகள், கிடாக்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இறைச்சி ஆடுகளை வாங்க வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் ஆடுகள் ரூ.43 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. சுற்றுப்பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை வாங்க குறைவான வியாபாரிகள் வந்திருந்தனர். கோழிகள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.