நாகப்பட்டினம் கலைஞர் அறிவாலயத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திமுக கூட்டம்
நாகப்பட்டினம், டிச.13:நாகப்பட்டினம் கலைஞர் அறிவாலயத்தில் என்வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தளபதி அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் லோகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் திருத்த பணியை நேற்று (11ம் தேதி) யுடன் நிறைவுபெறும் என அறிவித்த நிலையில் மீண்டும் வரும் 14ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. எஸ்ஐஆர் திருத்த பணியில் திமுகவினர் மட்டுமே களத்தில் இருந்தோம். மற்ற கட்சியினர் கூட்டணி குறித்து பேசுவதில் இருந்தனர். நமக்கும் சேர்த்து திமுக பணியாற்றும் என நினைத்து மற்ற கட்சியினர் எஸ்ஐஆர் பணியில் ஈடுபடவில்லை. நமக்கு மட்டும் இன்றி மற்றவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு தலைகுனியாது, என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி என மூன்று முத்தாய்ப்பு பணிகளை முதல்வர் நமக்கு ஒப்படைத்துள்ளார். இதில் இரண்டு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி பணியை அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் பணி 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. மீதமுள்ளவற்றை விரைந்து முடிக்க வேண்டும். முதல்வர் தலைவராக இல்லாமல் தொண்டராக களத்தில் நின்று பணியாற்றுகிறார். அதே போல் நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் இணைத்தவர்களை தெரு முனை பிரசாரத்திற்கு வரவழைத்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து கூற வேண்டும்.
முதல்வர் நிறைய செய்துள்ளார். எனவே சாதனைகளை தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தெகுதிகளில் சுழற்சி அடிப்படையில் திமுக போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாகப்பட்டினத்தில் கூட்டணி கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் திமுக நிற்க வாய்ப்புள்ளது. இந்த கோரிக்கையை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வற்புறுத்துவோம். நமக்காக உழைக்கும் முதல்வருக்கு வரும் தேர்தலில் உழைக்க தயக்கம் காட்ட கூடாது என்று அமைச்சர் பேசினார். தொகுதி பார்வையாளர்கள் அருட்செல்வன், ஜெயபிரகாஷ், சங்கர், விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் பேசினர். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.