நாகப்பட்டினம் / மயிலாடுதுறை மணல்மேடு அருகே ஆற்றுநீர் சுழலில் சிக்கி மாணவன் உயிரிழப்பு
மயிலாடுதுறை, ஆக.4: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் மேலத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்திசிவன் (வயது17). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் கும்கி மண்ணியாற்றில் சட்ரஸ் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றுநீர் சுழலில் சிக்கி சக்திசிவன் மூழ்கினார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணல்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சக்திசிவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் மூழ்கி இறந்த சக்திசிவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன சக்திசிவன், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.சிவில் முதலாமாண்டு படிப்பதற்காக வருகிற 10ம் தேதி முதல் கல்லூரி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது.