நாகை மாவட்டத்தில் ஆக.2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகப்பட்டினம், ஜூலை 31: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து முதல்வரின் வழிகாட்டுதலோடு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே பாப்பாகோயில் பகுதியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் மற்றும் தையல் கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களது கல்வி தகுதி குறித்த விவரங்களை முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.