நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவாலயங்களை புனரமைக்க அரசு மானியம்
நாகப்பட்டினம், ஜூலை 24: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறயிருப்பதாவது: தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்கக் கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இந்த மானியத் தொகை வழங்கப்படமாட்டாது.
மேற்படி திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட், ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள்(ம)பக்தர்கள் அமர்ந்து முழுங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவாயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் ஆகியவை ஆகும்.
தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை ரூ.10 லட்சம், 15 முதல் 20 வருடம் வரை ரூ.15 லட்சம், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ.20 லட்சம் என தற்போது மானியம் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.