மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 328 மனுக்கள் பெறப்பட்டது
மயிலாடுதுறை, நவ. 11: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 328 மனுக்கள் பெறப்பட்டன.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் காந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மனுக்களை அளித்தனர்.பொதுமக்கள் தரப்பில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 35 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 10 மனுக்களும், ஆக்கிரமிப்புகள் அகற்றகோரி 32 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைகோரி 25 மனுக்களும், பல்வேறு புகார்கள் தொடர்பாக 38 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 26 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 34 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நில பிரச்னை தொடர்பாக 15 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 18 மனுக்களும், இலவச கான்கிரீட் வீடு வேண்டி 13, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக 9, குடும்ப அட்டை தொடர்பாக 14, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 21, தொழிலாளர் நலன் தொடர்பாக 11, மற்றும் இதர கோரிக்கை தொடர்பான மனுக்கள் 27 என மொத்தம் 328 மனுக்கள் கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் காந்த், சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் காந்த் தெரிவித்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,820 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், ஆர்டிஓ உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் உமா மகேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.