விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார் 12ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை
திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் வருகைக்காக மேற்கொள்ளப்படும் விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 12ம் தேதி வருகிறார். மாவட்ட எல்லையில் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 13ம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதன்படி, அன்று மாலை திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு செங்கோல் வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதையொட்டி, திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்டமான விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, துணை முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாவில் பங்கேற்கும் பயனாளிகள் விவரம் விழா மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாநகர பகுதி செயலாளர்கள் குட்டி புகழேந்தி, விஜயராஜ், ஷெரீப், சீனிவாசன், சண்முகம், கோவிந்தன், துணை மேயர் ராஜாங்கம், துரை வெங்கட், இல.குணசேகரன், காலேஜ் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாணியந்தாங்கல் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக அமைக்கப்படும் பிரமாண்டமான பந்தல் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.