மாங்குளம்-கிடாரிபட்டி சாலை சீரமைக்கப்படுமா?
மதுரை, நவ. 25: மதுரை, மாங்குளத்திலிருந்து கிடாரிபட்டி செல்லும் சாலை சுமார், 8 கி.மீ, தூரம் கொண்டது. இச்சாலை தென்திசையில் உள்ள பூசாரிபட்டி, ஜோதியாபட்டி வழியாக சென்று மதுரை- திருச்சி சாலையையும், வடதிசையில் மேலூர்-அழகர்கோவில் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. புறநகரில் உள்ள இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் இந்த முக்கிய சாலையில் மாங்குளத்திலிருந்து கிடாரிபட்டி செல்லும் திசையில் தேர்குன்றத்துபட்டி அருகே சுமார் 1 கி.மீ, தூரத்திற்கு சாலை சேதமடைந்து கிடக்கிறது.
தற்போதைய மழையில், சம்பந்தப்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியும், குண்டும், குழியுமாக மாறியும் கிடப்பதுடன், மின்விளக்குகளும் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் கரும்பும், இருபோக சாகுபடியாக நெல்லும் பயிரிடப்படும் நிலையில், தற்போது மாங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாற்று நடும் பணிகளும், உழவு பணிகளும் தொடங்கியுள்ளன. இதையடுத்து, அடுத்தகட்ட விவசாய பணிகளுக்காக விவசாயத்திற்கான இடுபொருட்கள் கொண்டு செல்ல பிரதான சாலைகளை அடைய, வசதியாக உள்ள இந்த இணைப்பு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.